கிரீசில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாப சாவு


கிரீசில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 25 Dec 2021 5:30 PM GMT (Updated: 25 Dec 2021 5:30 PM GMT)

கிரீசில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அகதிகளாக செல்கின்றனர்

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

பெரும்பாலும் இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்.இப்படி மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நீண்ட கடல் பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்துவிடுகின்றன.

படகு கடலில் கவிழ்ந்தது

இந்த நிலையில் கிரீஸ் நாட்டின் பரோஸ் தீவில் ஏஜியன் கடலில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 100 அகதிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அகதிகள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதனிடையே இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கிரீஸ் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

16 பேர் பரிதாப சாவு

எனினும் 3 பெண்கள் மற்றும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 16 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர்.

அதே வேளையில் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 63 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் இன்னும் சிலர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

3 நாட்களில் 3 விபத்து

எனினும் மாயமானவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரீசில் 3 நாட்களில் நடந்த 3-வது அகதிகள் படகு விபத்து இதுவாகும். முன்னதாக கடந்த வியாழக்கிழமை மாலை கிரீசின் ஆன்டிகிதெரா தீவில் அகதிகள் படகு கவிழ்ந்து, விபத்துக்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 90 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

அதற்கு முந்தைய நாள் போலேகாண்ட்ரோஸ் தீவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 3 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.


Next Story