விடாமல் குண்டு மழை பொழியும் ரஷியா ; மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்


விடாமல் குண்டு மழை பொழியும் ரஷியா ; மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்
x
தினத்தந்தி 24 Feb 2022 7:22 AM GMT (Updated: 24 Feb 2022 7:23 AM GMT)

போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது.

லண்டன்

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

போரை முன்னிட்டு லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு பகுதிக்கு புலம்பெயர உக்ரைன் அறிவுறுத்தி உள்ளது.  இதன்படி, தனியாக செல்ல இயலாதவர்கள் ரெயில்களை பயன்படுத்த கூறப்பட்டு உள்ளது.  அவர்களை லிசிசான்ஸ்க், ரூபிஜ்னே மற்றும் ஸ்வாடோவ் ரெயில் நிலையங்களுக்கு செல்லும்படி கூறப்பட்டுள்ளது.  மெட்ரோ சுரங்க பாதையில் உக்ரைன் மக்கள் தற்காத்து கொள்வதற்காக தஞ்சமடைந்து உள்ளனர்.

உக்ரைனில் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கிளஸ்டர் பாம்ப் எனப்படும் கொத்து குண்டு உள்ளிட்ட வகை வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன.உக்ரைனில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து ரஷியா குண்டு வீசுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு துறைமுக நகரான மரியூபோல்,கருங்கடல் துறைமுக நகரான ஒடேசா மீது போர் விமானங்கள் மூலம்  ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்யா, சைபர் தாக்குதலையும் தொடங்கியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. உக்ரைன் அரசின் முக்கிய இணையதங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளது.

உக்ரைன் அரசின் வெளியுறவுத்துறை, உட்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளின் இணையதளங்கள் முடக்கப்பட்டு உள்ளது.

ரஷியாவின் சைபர் தாக்குதலில், உக்ரைன் அமைச்சர்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கமப்பட்டு உள்ளது.

உக்ரைனின் நூற்றுக்கணக்கான முக்கிய இணையதங்களில் தகவல் அழிப்பு டூல் மால்வேர் மூலம் ரஷியா சைபர் தாக்குதல் நடத்தி உள்ளது.

Next Story