சவுதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 25 March 2022 5:01 PM GMT (Updated: 25 March 2022 5:01 PM GMT)

சவுதி எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ரியாத்,

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. இந்த கூட்டுப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளடக்கம். இதனால், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி தலைமையிலான கூட்டு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய டிரோன் தாக்குதலால் எண்ணெய் கிடங்குகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தாக்குதல் நடைபெற்ற பகுதி அருகே சர்வதேச கார் போட்டிகளில் முதன்மையான பார்முலா 1 கார் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தால் பார்முலா 1 கார் போட்டி நடைபெற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

Next Story