பாகிஸ்தானில் கியாஸ் வினியோகம் செய்வதில் சிக்கல் - மக்கள் அவதி


பாகிஸ்தானில் கியாஸ் வினியோகம் செய்வதில் சிக்கல் - மக்கள் அவதி
x

கோப்புப்படம்

கையிருப்பு குறைந்ததால் பாகிஸ்தானில் கியாஸ் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இஸ்லாமாபாத்,

அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் அங்கு உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்தது. இந்தநிலையில் தற்போது சில தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தன. இதனால் அங்கு கியாஸ் கையிருப்பு குறைந்து வருகிறது.

இது குறித்து அந்த நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி முஸ்டாக் மாலிக் கூறுகையில், `இனி வரும் காலங்களில் 24 மணி நேரமும் கியாஸ் வழங்க முடியாது. மேலும் பணக்காரர்களுக்கு கூடுதல் விலையிலும், ஏழைகளுக்கு மானிய விலையிலும் கியாஸ் வழங்கப்படும். தற்போது புனித ரமலான் மாதம் என்பதால் அதிகாலை ஷெகர் மற்றும் மாலை நோன்பு துறக்கும் இப்தார் நேரங்களில் மட்டும் தடையின்றி கியாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது' என தெரிவித்தார்.

பெட்ரோலிய துறை மந்திரியின் இந்த அறிவிப்புக்கு கராச்சி வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கண்டனத்தை தெரிவித்து உள்ளது. கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டால் தொழிற்சாலைகள் இயங்கவே முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story