காசா நகர் மீது 2-வது நாளாக இஸ்ரேல் வான்தாக்குதல்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது


காசா நகர் மீது 2-வது நாளாக இஸ்ரேல் வான்தாக்குதல்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது
x

பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

காசா,

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா நகரில் உள்ள போராளிகள் குழுவுக்கும் இடையே பலகாலமாக மோதல் நீடித்து வரும் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில் காசா நகரில் உள்ள பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் தலைவர் தைசிர் அல் ஜபாரி உள்பட 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் வான்தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

அதைதொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினம் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் குழுவின் மற்றொரு தலைவரான கலீத் மன்சூர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் வான்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 அதிகரித்துள்ளதாகவும், 200-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர்களில் 6 சிறுவர்களும் அடங்குவர் என அதிகாரிகள் கூறினர்.


Next Story