தைவான் வான்வெளியில் 42 சீன போர் விமானங்கள்... ராணுவ பயிற்சியால் பரபரப்பு


தைவான் வான்வெளியில் 42 சீன போர் விமானங்கள்... ராணுவ பயிற்சியால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Aug 2023 10:21 AM GMT (Updated: 19 Aug 2023 10:24 AM GMT)

ராணுவ பயிற்சி என கூறி தைவான் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்த சீனாவின் 42 போர் விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தைப்பே,

தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிராந்திய பகுதியாக சீனா கூறி வந்தபோதும், தனி சுதந்திர நாடாக தைவான் செயல்பட்டு வருகிறது. அந்நாட்டுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவுகரம் நீட்டியுள்ளன.

எனினும், இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா தனது வான் மற்றும் கடல்வழி ரோந்து பணிகள் மற்றும் ராணுவ பயிற்சிகளை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஜின்குவா செய்தி நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

இதனை, அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து கொண்டு, தைவான் சுதந்திரம் கோரும் பிரிவினைவாதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை என சீனா கூறியுள்ளது.

இதன்படி, தைவான் நாட்டின் வான்வெளி பாதுகாப்பு மண்டலத்திற்குள், இந்த பயிற்சியில் சீனா ஈடுபட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதற்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், எங்களது ஆயுத படைகள் 42 சீன போர் விமானங்களை கண்டறிந்து உள்ளது. அவற்றில் கே.ஜே.-500, ஒய்-9, ஜே-10, ஜே-11, ஜே-16, சூ-30 உள்ளிட்டவையும் அடங்கும்.

இவற்றில் 26 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் இடைக்கோட்டை கடந்து சென்றுள்ளன. இவை தவிர 8 கப்பல்களுடன் சேர்ந்து விமானங்கள், கூட்டு ரோந்து பணியையும் மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்து உள்ளது.

இவற்றை எங்களுடைய விமானம், கப்பல் மற்றும் தரை சார்ந்த ராக்கெட் சாதனங்களை கொண்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சீனாவின் சமீபத்திய இந்த ராணுவ பயிற்சிகளுக்கு தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், தூண்டிவிடும் அணுகுமுறையை சீனா கடைப்பிடிக்கிறது எனவும் கூறியுள்ளது.

தொடர்ந்து சமீப ஆண்டுகளாக, விமானங்கள் மற்றும் கப்பல்களை சீன கம்யூனிஸ்டு கட்சி அனுப்பி வருகிறது என தைவான் சுட்டி காட்டியுள்ளதுடன், இந்த செயல் மண்டல பாதுகாப்புக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story