வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி- 100 பேர் படுகாயம்


வங்காளதேசம்: சேமிப்புக்கிடங்கில் திடீர் தீ விபத்து: 5 பேர் பலி- 100 பேர் படுகாயம்
x

கோப்புப்படம் 

வங்காளதேசத்தில் தனியார் சேமிப்புக்கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் தென்கிழக்கு நகரமான சிதகுண்டாவில் உள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் இறந்தனர். மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங்கிற்கு வெளியே 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் உள்ள உள்நாட்டு கொள்கலன் சேமிப்பு நிலையத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரி ஜலால் அகமது தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். அப்போது தீயணைப்பு வீரர்களும் லேசான காயமடைந்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது100 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில், 20 பேர் 60 முதல் 90 சதவிகிதம் வரையிலான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உள்ளனர்.


30 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட தனியார் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தனியார் கிடங்கில் உள்ள சில கொள்கலன்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரிகள் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story