இஸ்ரேல் சிறையில் இருந்து பாட்டிலில் விந்தணு கடத்த முயன்ற பாலஸ்தீனியர்...!!


இஸ்ரேல் சிறையில் இருந்து பாட்டிலில் விந்தணு கடத்த முயன்ற பாலஸ்தீனியர்...!!
x

கோப்பு படம்

தினத்தந்தி 28 Jun 2023 10:25 AM GMT (Updated: 28 Jun 2023 10:37 AM GMT)

இஸ்ரேல் நாட்டில் உள்ள ரேமன் சிறையில் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் பாட்டிலில் விந்தணு கடத்த முயன்று உள்ளார்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் ரேமன் சிறை உள்ளது. இதில், பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பாலஸ்தீனியர் ஒருவர் சிறையில் உள்ள மற்றொரு பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களை பாட்டில் ஒன்றில் வைத்து கடத்தி சென்று உள்ளார் என கூறப்படுகிறது.

ரேமன் சிறைக்கு வெளியே உள்ள சீர்திருத்த இல்லத்தில் அந்த பாலஸ்தீனியர் தங்கி உள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து இஸ்ரேலிய பாதுகாவல் படையினர் அவரை பிடித்து, விசாரித்து உள்ளனர். இதன்பின்னர், விந்தணுக்களை வழங்கிய, சிறையில் உள்ள பாலஸ்தீனிய கைதியையும் அடையாளம் கண்டு, அவரை தனிமைப்படுத்தி உள்ளனர்.

பாலஸ்தீனிய சிறை கைதிகளின் விந்தணுக்களை வெளியே கடத்தி சென்று, குழந்தைகள் பிறப்பது என்பது பாலஸ்தீனிய நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விசயங்களில் ஒன்றாக உள்ளது. இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விந்தணுக்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு, இதுபோன்று 100 குழந்தைகள் வரை கைதிகளுக்கு பிறந்து உள்ளனர் என கூறப்படுகிறது.

ஐ.வி.எப். எனப்படும் சிகிச்சை முறையில் இந்த விந்தணுக்களை பயன்படுத்தி கைதிகளின் மனைவிகள் கர்ப்பமடைகிறார்கள். இதற்காக ரூ.8.2 லட்சம் செலவாகும். சில சமயங்களில் கூடுதல் செலவும் ஏற்படும். பாலஸ்தீன நாட்டில் இந்த சிகிச்சைகளை அளிக்கும் கிளினிக்குகள் உள்ளன.

கைதி நீண்ட காலம் சிறையில் அடைப்படும்போது, இந்த நடைமுறையை கிளினிக்குகள் பின்பற்றுகின்றன. இதற்கு பாலஸ்தீன மதகுருக்களும் அனுமதி அளித்து முஸ்லிம் மத நடைமுறைக்கான விதிகளை வெளியிடுகின்றனர்.

எனினும், இந்த குழந்தைகள் சட்டவிரோதம் ஆனவை என இஸ்ரேலிய அரசு கூறி வருகிறது. சிறையில் இருந்து கிளினிக்குக்கு கொண்டு செல்லும் வரை அந்த விந்தணுக்கள் உயிர் பிழைக்க முடியாது. அதற்கான சிறப்பான சூழல் இருக்க வேண்டும். அதனால், இந்த குழந்தைகள் எல்லாம் மற்றொரு தந்தையால் உருவாக்கப்படுபவை என கூறுகின்றனர். இந்த முறையில், 2012-ம் ஆண்டு முதன்முறையாக பாலஸ்தீனிய குழந்தை பிறந்து உள்ளது.


Next Story