அமெரிக்கா: ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்றதில் விபரீதம்; உயிரிழந்த இந்திய மாணவர்கள்


அமெரிக்கா:  ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்றதில் விபரீதம்; உயிரிழந்த இந்திய மாணவர்கள்
x

அமெரிக்காவில் ஏரியின் ஆழத்தில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்றதில் சிக்கி, 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.


மிசோரி,


அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஒஜார்க்ஸ் என்ற இடத்தில் வாரஇறுதி நாளில் நடந்த திருவிழா கொண்டாட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். எனினும், அன்றைய தினம் அவர்களது வாழ்வு சோகத்துடன் முடிந்துள்ளது.

இதுபற்றி மிசோரி மாகாண நெடுஞ்சாலை ரோந்து பணி போலீசார் கூறும்போது, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களில் ஒருவர் ஏரியில் குதித்து நீச்சல் அடித்துள்ளார். நீரின் ஆழத்திற்கு சென்ற அவர் பின்னர் மேலே வரவேயில்லை.

இதனால், உடன் சென்ற அவரது நண்பர் பதற்றமடைந்து, நண்பரை காப்பாற்ற எண்ணியுள்ளார். உடனே அவரும் நீருக்குள் குதித்து அவரை தேடியுள்ளார். இந்த சம்பவத்தில் இருவரும் நீருக்குள் சிக்கி, உயிரிழந்து விட்டனர்.

தெலுங்கானாவை சேர்ந்த இருவரும் அமெரிக்காவில் உள்ள மாகாண பல்கலை கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.

அவர்கள் உத்தெஜ் குந்தா (வயது 24) மற்றும் சிவா கெல்லிகாரி (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதனால், அவர்களது உறவினர்கள் சோகம் அடைந்து உள்ளனர்.

இதுபற்றி தெலுங்கானா மந்திரி கே.டி. ராமராவ் கூறும்போது, இந்திய மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளும்படி எனது குழுவினரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story