அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு: வெள்ளை மாளிகையை நோக்கி மக்கள் பேரணி


அமெரிக்காவில் கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்பு: வெள்ளை மாளிகையை நோக்கி மக்கள் பேரணி
x

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நூற்றுக் கணக்கானோர் குவிந்து கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்த நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து கடந்த 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்ட உரிமையை அதிரடியாக ரத்து செய்தது.

இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாஷிங்டன் மாகாணத்தில் நூற்றுக் கணக்கானோர் குவிந்து கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். அவர்கள் பதாகைகளுடன் நகரில் வலம் வந்தனர்.

நகரம் முழுவதும் சென்ற பேரணி வெள்ளை மாளிகை முன்பு நிறைவடைந்தது. கருக்கலைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நிர்வாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்த பேரணி நடத்தப்பட்டது.


Next Story