ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் 250 இலக்குகள் தாக்கி அழிப்பு; இஸ்ரேல் அதிரடி


ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் 250 இலக்குகள் தாக்கி அழிப்பு; இஸ்ரேல் அதிரடி
x

இஸ்ரேல் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவுவதற்காக வந்து கொண்டிருந்த பயங்கரவாத குழு, வழியிலேயே தாக்குதல் நடத்தி ஒழிக்கப்பட்டது என பாதுகாப்பு படை தெரிவித்தது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால், இருதரப்பிலும் ஆயிரக்கணக்கிலான குடிமக்கள் உயிரிழந்து உள்ளனர். பல்வேறு கட்டிடங்களும் சேதமடைந்து உள்ளன. மக்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர்ந்துள்ளனர்.

இந்த போரில் 17,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். இஸ்ரேலில் 1,147 பேர் உயிரிழந்தனர். போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. தன்னுடைய நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என கூறியது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவு தெரிவிக்கின்றது என்று கூறப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தின்போது பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தும், பதிலுக்கு பணய கைதிகள் விடுவிக்கப்பட்டும் வந்தனர். போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர், மீண்டும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த 24 மணிநேரத்தில் நிலம், கடல் மற்றும் வான் வழியே ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் 250 இலக்குகளை தாக்கி அழித்தனர். இஸ்ரேல் எல்லையை நோக்கி ராக்கெட்டுகளை ஏவுவதற்காக வந்து கொண்டிருந்த பயங்கரவாத குழு ஒன்றை, வழியிலேயே வைத்து தாக்குதல் நடத்தி ஒழித்து விட்டோம் என்றும் படையினர் தெரிவித்தனர்.

இதற்காக, பெரிய வகை துப்பாக்கிகள், கவச வாகனங்கள் உள்ளிட்ட ஒன்றிணைந்த ஆயுதங்கள் கொண்ட படையினர், எல்லை காவல் படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையில், சஜையா பகுதியில் பயங்கரவாத குழுவினர் அழிக்கப்பட்டனர். விமான படையை சேர்ந்த விமானம் ஒன்றை கொண்டு, அந்த பயங்கரவாத குழுவினரை அவர்கள் தாக்கி அழித்தனர்.


Next Story