ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு


ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழப்பு
x

ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கர குண்டு வெடிப்பில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று மதியம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்த பிறகு மக்கள் மசூதியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது.

இதனால் கடும் பீதியடைந்த மக்கள் உயிருக்கு பயந்து அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story