அமெரிக்க உயிரியல் பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்


அமெரிக்க உயிரியல் பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

அமெரிக்க உயிரியல் பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டன் நகரில் 163 ஏக்கர் பரப்பளவில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த பூங்காவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினம் தவிர ஆண்டு முழுவதும் செயல்படும் இந்த பூங்காவிற்கு தினந்தோறும் குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இந்த பூங்கா நிர்வாக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பூங்கா வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது. பார்வையாளர்கள், பூங்கா நிர்வாகிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பூங்காவை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

ஆனால் வெடிகுண்டோ அல்லது சந்தேகத்துக்குரிய வேறேதும் வெடிபொருளோ கிடைக்கவில்லை. அதன்பின்னரே இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர்.


Next Story