தைவான் எல்லையில் ராணுவ பயிற்சிகள் முடிவு பெற்றதாக சீனா அறிவிப்பு


தைவான் எல்லையில் ராணுவ பயிற்சிகள் முடிவு பெற்றதாக சீனா அறிவிப்பு
x

தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளைத் திட்டமிட்டு வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

பீஜிங்,

சீனாவில் 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் தைவான் தீவு, தனி நாடாக உருவானது. ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத சீனா, அந்த தீவு இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது. அதோடு தைவான் தீவை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா துடியாய் துடித்து வருகிறது. இதனால் தைவான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை தொடங்கியது.

கடந்த 4-ந்தேதி தொடங்கிய இந்த போர்ப்பயிற்சி 8-ந்தேதியுடன் முடிவுக்கு வரும் சீனா ராணுவம் அறிவித்திருந்த நிலையில், 8-ந்தேதியை தாண்டியும் தைவான் எல்லையோரத்தில் சீனா தனது போர் பயிற்சிகளை தொடர்ந்தது. இதனை தைவான் கடுமையாக விமர்சித்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே வரும் நாட்களில் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ராணுவ பயிற்சிகள் முடிவு பெற்றதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ராணுவ பயிற்சிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தைவான் எல்லையில் வழக்கமான ரோந்துப் பணிகளை நடத்த திட்டமிட்டு வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.


Next Story