"உலகளாவிய நீர் பற்றாக்குறையை போக்க கூட்டு முயற்சி தேவை" - ஐ.நா. வலியுறுத்தல்


உலகளாவிய நீர் பற்றாக்குறையை போக்க கூட்டு முயற்சி தேவை - ஐ.நா. வலியுறுத்தல்
x

நீர் மூலாதாரங்களை பாதுகாக்க சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

நியூயார்க்,

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களை நேரடியாக பாதிக்கும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையை போக்குவதற்கு கூட்டு முயற்சி வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் நீர் பற்றாக்குறை பிரச்சினையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் இது தொடர்பான கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தொடரின் தலைவர் சபா கொரோசி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் உலகம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ளதாகவும், இயற்கை வளங்கள் குறைந்து கொண்டே வருவதாகவும் குறிப்பிட்டார்.

நம்மிடையே உள்ள குறைவான நீரும் மாசடைந்து வருவதாக தெரிவித்த அவர், உலக அளவில் குடிநீர் பற்றாக்குறை 100 கோடிக்கும் அதிகமானோரை பாதித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 2040-ம் ஆண்டில் சுமார் 40 சதவீதம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிவித்த அவர், இந்த பகுதிகளில் தான் உலகின் 40 சதவீத உணவு தானியங்கள் உற்பத்தி ஆவதாக கூறியுள்ளார்.

எனவே நீர் மூலாதாரங்களை பாதுகாக்க சரியான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் உலகளாவிய சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஐ.நா.வின் 77-வது கூட்டத்தொடரின் தலைவர் சபா கொரோசி வலியுறுத்தியுள்ளார்.


Next Story