வங்காளதேசத்தில் அதிர்ச்சி; டெங்கு பாதிப்பு 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


வங்காளதேசத்தில் அதிர்ச்சி; டெங்கு பாதிப்பு 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 17 Sep 2023 9:25 AM GMT (Updated: 17 Sep 2023 10:50 AM GMT)

வங்காளதேசத்தில் இந்த ஆண்டில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரித்து காணப்படுகிறது.

இதன்படி, சுகாதார சேவைகளின் பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த ஆண்டில் டெங்குவுக்கு 804 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு பாதிப்புக்கு நேற்று காலை வரை, கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் உயிரிழந்து உள்ளனர் என டாக்கா ட்ரிபியூன் பத்திரிகை தெரிவிக்கின்றது.

இதற்கு முன் 2022-ம் ஆண்டில் 281 பேர் உயிரிழந்து இருந்தனர். இதுவே அதிக எண்ணிக்கையாக இருந்தது. அதற்கு முன் 2019-ம் ஆண்டில் 179 பேர் உயிரிழந்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிக அளவாக உள்ளது.

இந்த ஆண்டில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 562 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 1,53,428 பேர் குணமடைந்து உள்ளனர். எனினும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொடர்ந்து டெங்கு பரவல் காணப்படுகிறது.

நாடு முழுவதும் டெங்கு நோயாளிகள் 10,330 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் டாக்காவில் மட்டும் 4,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டாக்கா ட்ரிபியூன் பத்திரிகை தெரிவிக்கின்றது.


Next Story