கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதா? - மத்திய அரசு மறுப்பு


கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதா? - மத்திய அரசு மறுப்பு
x

கோத்தபய ராஜபக்சே தப்ப இந்தியா உதவியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு,

உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டத்துக்கு அஞ்சி, இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பினார். அவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.

இதுபற்றி கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது. அந்தப் பதிவில், " இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இது ஆதாரமற்றது, ஊகத்தின் அடிப்படையிலானது" என தெரிவித்துள்ளது.

மேலும், "இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள், மதிப்பீடுகள், ஜனநாயக அமைப்புகள், அரசியல்சாசன கட்டமைப்புகள் வழியாக செழிப்பான, முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்" எனவும் கூறப்பட்டுள்ளது.


Next Story