காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல்


காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. தகவல்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 15 Oct 2023 5:09 PM GMT (Updated: 15 Oct 2023 5:10 PM GMT)

காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

காசா,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. அதேபோல் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனிடையே காசா மீது தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதாகவும், வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் காசா போரின் முதல் வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா, "காசாவில் நடந்துவரும் போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே இஸ்ரேலின் தாக்குதல்களால் காசாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 2,450 ஆக அதிகரித்துள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 9,200 ஆக உயர்ந்துள்ளது. எனினும் தொடர்ந்து இருதரப்பினரும் தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story