இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்தில் தற்காலிக அனுமதி


இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்தில் தற்காலிக அனுமதி
x

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று தாய்லாந்து சென்றடைந்தார்

பாங்காங்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தினர்.

இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த ஜூலை 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த ஜூலை 13ந்தேதி ராணுவ விமானத்தில் தப்பி சென்றார்.

அதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். கோத்தபய ராஜபக்சேவின் விசா காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்து அரசிடம் அடைக்கலம் கோரி இருந்தார்.

இந்நிலையில் இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார். முன்னதாக இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அந்நாட்டு அரசு அனுமதியளித்திருந்தது. அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ள தாய்லாந்து அரசு, அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ளவேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story