அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டெல் அவிவ் பயணம்; பணய கைதிகளை விடுவிக்க முயற்சி


அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி டெல் அவிவ் பயணம்; பணய கைதிகளை விடுவிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 Nov 2023 9:21 AM GMT (Updated: 3 Nov 2023 9:55 AM GMT)

ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மேற்கொள்ள உள்ளார்.

டெல் அவிவ்,

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியானது. இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு இன்று அவர் புறப்பட்டு சென்றார்.

அதற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ஜனநாயகத்தின்படி குடிமக்களை பாதுகாப்பதற்கான கடமை உள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை, ஹமாஸ் அமைப்பு மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது. அவர்கள் தங்களுடைய ஆயுதங்கள், போராளிகள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் மசூதிகளுக்குள் வைத்துள்ளனர் என பிளிங்கன் கூறியுள்ளார்.

அவர், இஸ்ரேலில் பல உயர் அதிகாரிகளை அடுத்தடுத்து சந்தித்து பேச இருக்கிறார். இந்த பயணத்தில், சர்வதேச மனிதநேய சட்டத்திற்கு உட்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாத்து கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கான அமெரிக்காவின் ஆதரவை அவர் மீண்டும் வலியுறுத்துவார்.

இஸ்ரேல், மேற்கு கரை மற்றும் காசாவில் உள்ள அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் பற்றியும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகளை உடனடியாக விடுவிப்பதற்கான பணியையும் அவர் மேற்கொள்வார்.

பாலஸ்தீன மக்களுக்கான நிவாரண பொருள் விநியோகத்திற்காக காசாவுக்கு வழங்கப்படும் மனிதநேய உதவிகளின் வேகம் மற்றும் அளவை அதிகரிக்கவும் வேண்டிய பணிகளை அவர் மேற்கொள்ள உள்ளார்.


Next Story