சூறாவளி எச்சரிக்கை; மீண்டும் தள்ளி போன நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்


சூறாவளி எச்சரிக்கை; மீண்டும் தள்ளி போன நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம்
x

நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் பயணம் சூறாவளி எச்சரிக்கையை தொடர்ந்து மீண்டும் தள்ளி போயுள்ளது.



புளோரிடா,


அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இதன்படி, 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.

கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர்.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சக்தி வாய்ந்த ஐயான் என்ற சூறாவளி தாக்க உள்ளது என தகவல் வெளியானது. இது இந்த ராக்கெட் செலுத்த கூடிய பகுதியை கடந்து செல்ல கூடும் என்றும் கூறப்பட்டது. இதனால், ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து அதனை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர். சூறாவளி புயல், எரிபொருள் கசிவு உள்ளிட்ட காரணங்களுக்காக 3 முறை இந்த பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, அக்டோபர் 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலும் மற்றும் நவம்பர் 12-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலும் என இரண்டு காலகட்டங்களில் ஒன்றை நாசா தேர்வு செய்யும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், அக்டோபர் கடந்து நவம்பர் மாதம் வந்துள்ள சூழலில், நவம்பர் 14-ந்தேதி ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை செலுத்துவது என நாசா அமைப்பு முடிவு செய்தது. இதன்படி, அன்று அதிகாலை 12.07 மணியளவில் ராக்கெட்டை செலுத்தவும், அதனை லைவ் நிகழ்ச்சியாக நாசா வலைதளத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ராக்கெட்டை செலுத்தும் ஏவுதளத்துக்கு ராக்கெட்டை கொண்டு வந்தனர். இந்நிலையில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே சூறாவளி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த முறை நிக்கோல் என்ற சூறாவளியானது, புளோரிடாவின் கிழக்கு கடலோர பகுதியை நோக்கி பயணிக்கிறது. கென்னடி விண்வெளி மையம் அருகே இன்று கடந்து செல்ல கூடிய இந்த பருவகால புயலால் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சத்தில் நிலவு ஆய்வு விண்கலத்தின் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ, நவம்பர் 14-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில், இந்த முறை நவம்பர் 16-ந்தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

நமது திட்டத்தில் நம்முடைய மக்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இந்த விண்கல பயண தேதியை சற்று தள்ளி வைத்திருப்பது, பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவர்கள் தங்களது குடும்பத்தினரின் தேவைகளுக்கு உதவியாக இருப்பதற்கும் அனுமதி அளித்துள்ளது என ஜிம் ப்ரீ தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து 3 முறை ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்ட சூழலில், மீண்டும் ராக்கெட்டின் பயண தேதி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story