உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி: ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு


உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி:  ஊழியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு
x

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது

துபாய்,

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் எனப்படும் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பள்ளிவாசல்கள், கூடாரங்களில் நடைபெறும் இப்தார் நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நோன்பு திறந்து வருகின்றனர்.

துபாயில் பல்வேறு கின்னஸ் உலக சாதனைகள் பல வித்தியாசமான முறையில் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கின்னஸ் சாதனை நிகழ்விலும் பல்வேறு புதுமைகளை துபாய் உலகுக்கு காட்டி வருகிறது.விமான ஓடுபாதையில் இதன் ஒரு பகுதியாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியிலும் இத்தகைய புதுமை படைக்கப்பட்டுள்ளது.உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்படும் ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை கொண்டு நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

அந்த சமயத்தில் விமானங்கள் தரையிறங்குவது, செல்வதும் வழக்கம் போல் நடந்து வந்தன. இதனை பார்த்தவாறே நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

இது குறித்து துபாய் விமான நிலையங்களின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மாஜித் அல் ஜொகர் கூறியதாவது,

துபாய் சர்வதேச விமான நிலைய ஊழியர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மிகவும் பரபரப்பான சூழலில் வேலை செய்து வந்தவர்கள் அதனை மறந்து பலரும் விளையாட்டாக பேசிக் கொண்டு மன இறுக்கத்தை மறந்து செயல்பட்டனர். விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் ஊழியர்களின் பங்களிப்பு முக்கியமானது அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story