நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகள் வழங்கியது இந்தியா..!


நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள், 17 பள்ளி பேருந்துகள் வழங்கியது இந்தியா..!
x

image courtesy: IndiaInNepal twitter

நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியது.

காத்மாண்டு,

இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையிலான "வலுவான மற்றும் நீண்டகால" கூட்டாண்மையை கட்டி எழுப்புவதற்கும், நேபாளத்தின் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகளை இந்தியா இன்று பரிசாக வழங்கியது.

நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி தேவேந்திர பவுடல் முன்னிலையில் நேபாளத்திற்கான இந்தியாவின் புதிய தூதர் நவீன் ஸ்ரீவஸ்தவா வாகனங்களின் சாவியை வழங்கினார். 75 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்கப்படுவது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிக்கும் என்று நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

"ஆம்புலன்ஸ்கள் மற்றும் பள்ளி பேருந்துகளை பரிசாக வழங்குவது இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான மற்றும் வளர்ச்சி கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்" என்று நவீன் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

நேபாள-இந்தியா மேம்பாட்டுக் கூட்டுத் திட்டத்தின் கீழ், சுகாதாரம் மற்றும் கல்வியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நேபாளத்தின் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் நீண்டகால பாரம்பரியங்களில் இந்த முயற்சியும் ஒன்றாகும்.

கடந்த ஆண்டில், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நேபாளத்துக்கு உதவும் வகையில் வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ்களை இந்தியா வழங்கியது. இதேபோல், 2020 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு நேபாளத்திற்கு 41 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 6 பள்ளி பேருந்துகளை இந்தியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story