உளவு பணியில் ஈடுபட்டார்... ரஷிய உளவு துறை குற்றச்சாட்டு; அமெரிக்க நிருபர் மறுப்பு


உளவு பணியில் ஈடுபட்டார்... ரஷிய உளவு துறை குற்றச்சாட்டு; அமெரிக்க நிருபர் மறுப்பு
x

உளவு பணியில் ஈடுபட்டார் என்ற ரஷிய உளவு துறையின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க நிருபர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

வாஷிங்டன்,

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது, ஓராண்டை கடந்த நிலையில், தீவிரமடைந்து உள்ளது. அந்நாட்டின் பாக்முத் நகரை கைப்பற்றி விட்டோம் என ரஷியா கூறி வருகிறது. அந்த நகரில் ரஷிய கொடியும் நாட்டப்பட்டு உள்ளது என ரஷியாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பு தெரிவித்து உள்ளது.

ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எடுத்து வருகின்றன. போரை நிறுத்த கோரும் அந்நாடுகள், மறுபுறம் உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி போரை ஊக்கப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் புதின் முன்வைத்து உள்ளார்.

இந்நிலையில், போர் சூழலை பற்றி செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்காவின் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையை சேர்ந்த ஈவான் கெர்ஷ்கோவிச் என்ற நிருபரை ரஷியா கைது செய்து உள்ளது. அவர், உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷியாவில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

நிருபரின் உயிர்பாதுகாப்பு பற்றி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளது.

ரஷியாவின் மத்திய பாதுகாப்பு துறை எனப்படும் எப்.எஸ்.பி. என்ற உளவு அமைப்பு வெளியிட்ட செய்தியில், எகாடரீன்பர்க் மாகாணத்தில், உரால் மலைப்பிரதேச பகுதியில் வைத்து, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் நிருபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அமெரிக்க தரப்பு உத்தரவின்படி ஈவான் செயல்பட்டு, ரஷிய ராணுவத்தின் தொழில் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றின் செயல்பாடுகள் பற்றி ரகசிய தகவல்களை சேகரித்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.

இந்த தகவலை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இதனை அல்-ஜசீரா செய்தி நிறுவனமும் உறுதி செய்து உள்ளது.

எனினும், உக்ரைனுக்கு எதிரான போர் மற்றும் ரஷியாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பு ஆகியவற்றை பற்றி அவர் செய்தி சேகரித்து வந்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த உளவு குற்றச்சாட்டில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால், ஈவானுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க கூடும்.

உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து, முதன்முறையாக அமெரிக்க செய்தி நிறுவன பத்திரிகையாளர் ஒருவர் ரஷியாவில் வைத்து உளவு குற்றச்சாட்டுக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் அல்-ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இந்த கைது நடவடிக்கைக்கு, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து உள்ளார். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவிடம் தொலைபேசி வழியே கேட்டு கொண்டார்.

இதுபற்றி ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க நாட்டை சேர்ந்த நபரின் சட்டவிரோத செயல்களுக்கான சான்றுகள் வெளிவந்த நிலையில், அவரது வருங்காலம் பற்றி கோர்ட்டு முடிவு செய்யும்.

அவரது கைது நடவடிக்கை பற்றி மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று தெரிவித்து உள்ளது.

நிருபருக்கான அந்தஸ்து என்ற பெயரில், ஒரு நாட்டின் ரகசிய விசயங்கள் உள்ளடங்கிய தகவல்களை அவர் சேகரித்து உள்ளார். ரகசிய தரவுகளை பெறும்போது, தக்க தருணத்தில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என லாவ்ரவ் தெரிவித்து உள்ளார்.

இதில், ரஷிய அதிகாரிகளின் முடிவானது சட்டத்திற்கு உட்பட்டும், சர்வதேச அளவிலான ரஷியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் நடைபெறும். அதனை மதிக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது என பிளிங்கனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்றும் ரஷிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க நிருபரிடம் நடந்த விசாரணை பற்றிய விவரங்கள் பற்றி சி.என்.என். வெளியிட்ட செய்தியில், ரஷிய உளவு துறையின் விசாரணையில் அமெரிக்க நிருபர், அவரது நாட்டின் நலன்களுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் கெர்ஷ்கோவிச் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ரஷியாவில், பத்திரிகையாளர் பணியில் ஈடுபட்டு இருந்தேன் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிருபர் கூறியுள்ளார் என்று ரஷியாவின் டாஸ் என்ற அரசு ஊடகம் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

எனினும், நிருபரின் வழக்கு அதிக ரகசியம் வாய்ந்தது என கூறி வேறு தகவல்கள் எதனையும் விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கவில்லை என டாஸ் ஊடகம் தெரிவித்து உள்ளது.


Next Story