இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 8 பாலஸ்தீனியர்கள் பலி 13 பேர் படுகாயம்


இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 8 பாலஸ்தீனியர்கள் பலி 13 பேர் படுகாயம்
x

இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 8 பேர் பலியாகினர். 1

ஜெருசலேம்,

இஸ்ரேல் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 8 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பாலஸ்தீனம் காசாமுனை மற்றும் மேற்குகரை என இரு பகுதிகளாக உள்ளது. இதில் காசாமுனை பகுதியானது ஹமாஸ் அமைப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது.

அதேபோல் மேற்குகரை பகுதியை பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நிர்வகித்து வருகிறார். இதில் சில பகுதிகள் இஸ்ரேல் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பல்வேறு போராளி குழுக்கள் செயல்படுகின்றன. இவர்களை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. எனவே இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனிய போராளி குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.

இந்தநிலையில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் நகரில் போராளி குழுக்கள் சிலர் இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்கள் பதுங்கி இருந்த முகாம்கள் மீது நள்ளிரவு டிரோன் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாலஸ்தீன போராளிகள் 8 பேர்சம்பவ இடத்திலேயே பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் தாக்குதல் நடைபெற்ற அந்த தெருக்களில் கரும்புகை எழுந்ததாகவும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கமும், அண்டை நாடான ஜோர்டானும் கடும் கண்டனம் தெரிவித்தன. அப்போது மேற்குகரையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என ஜோர்டான் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் கூறுகையில், `இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனிய போராளி குழுக்கள் சதித்திட்டம் தீட்டுவதாக தகவல் கிடைத்தது. எனவே போராளி குழுக்களை ஒழித்து ஆயுதங்களை பறிமுதல் செய்யவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது' என தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக பாலஸ்தீன அதிபர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் `இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து பாலஸ்தீன மக்கள் மண்டியிட மாட்டார்கள். இதனை எதிர்கொண்டு உறுதியாக நிற்பார்கள்' என கூறப்பட்டு உள்ளது.


Next Story