பணய கைதியான இஸ்ரேல் வீராங்கனை மரணம்; இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்


பணய கைதியான இஸ்ரேல் வீராங்கனை மரணம்; இஸ்ரேல் பாதுகாப்பு படை தகவல்
x
தினத்தந்தி 14 Nov 2023 11:14 PM GMT (Updated: 14 Nov 2023 11:29 PM GMT)

பணய கைதியாக நோவா இருக்கும் வீடியோ ஒன்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த திங்கட்கிழமை இரவில் வெளியிட்டனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர்.

அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படையில் வீராங்கனையாக செயல்பட்டு வந்தவர் நோவா மர்சியானோ (வயது 19). கடந்த அக்டோபர் 7-ந்தேதி கிபுட்ஜ் நஹால் பகுதியில், மற்றவர்களுடன் சேர்த்து அவரை பணய கைதியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர்.

கடந்த திங்கட்கிழமை இரவில், பணய கைதியாக நோவா இருக்கும் வீடியோ ஒன்றை ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டனர். இந்நிலையில், கடத்தப்பட்ட 5 வாரங்களுக்கு பின்னர் நோவா மரணம் அடைந்த தகவல் வெளிவந்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் வெளியிட்ட வீடியோ அடிப்படையில் நோவாவின் மரணம், உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் உளவு அமைப்பின் தகவலை அடிப்படையாக கொண்டே அவருடைய மரணம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு பின், மற்ற 3 பணய கைதிகளுடன் நோவா ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. அதற்கு ஒரு வாரம் கழித்து, நோவா கடத்தல் பற்றிய தகவலை அவருடைய குடும்பத்தினரிடம் இஸ்ரேல் தெரிவித்தது.

நோவா, அவருடைய தாயார் அதியிடம் கடைசியாக கடந்த அக்டோபர் 7-ந்தேதி காலை 7.30 மணியளவில் பேசினார். அப்போது அவர், பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கிறேன் என்றும் ஊடுருவல் ஒன்று நடந்துள்ளது என்றும் அதியிடம் கூறியுள்ளார். அரைமணி நேரத்திற்கு பின்பு, நோவாவுக்கு தாயார் அதி, எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பதில் வரவில்லை என அதி கூறினார். இந்நிலையில், நோவாவின் மரணம் பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story