தொடர்ந்து தள்ளி போகும் நிலவு பயண ராக்கெட் திட்டம்...!! நிறைவேறுமா நாசாவின் கனவு?


தொடர்ந்து தள்ளி போகும் நிலவு பயண ராக்கெட் திட்டம்...!! நிறைவேறுமா நாசாவின் கனவு?
x
தினத்தந்தி 16 Nov 2022 5:02 AM GMT (Updated: 16 Nov 2022 7:18 AM GMT)

நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

புளோரிடா,


அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு நிலவுக்கு கடந்த 1972-ம் ஆண்டில் விண்வெளி வீரர்களை அனுப்பியது. அதன்பின் கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை.

இந்த நிலையில், மீண்டும் நிலவு மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் நாசா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன்படி, வருகிற 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. எனினும், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன்படி, விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த ஆர்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும்.

இதன் பயண திட்டம் முதலில், கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது.

ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி விவாதித்தனர். எரிபொருள் கசிவு போன்ற காரணங்களால் ராக்கெட் செலுத்தும் திட்டம் தள்ளி போனது.

இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த முறையும் எரிபொருள் கசிவால் திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சக்தி வாய்ந்த ஐயான் சூறாவளி தாக்குதலால் ராக்கெட் பயணம் தள்ளி போனது.

தொடர்ந்து, நவம்பர் 14-ந்தேதி அதிகாலை 12.07 மணியளவில் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை செலுத்தவும், அதனை லைவ் நிகழ்ச்சியாக நாசா வலைதளத்தில் வெளியிடவும் என நாசா அமைப்பு முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து ராக்கெட்டை செலுத்தும் ஏவுதளத்துக்கு ராக்கெட்டை கொண்டு வந்தனர். இந்நிலையில், கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே நிகோல் சூறாவளி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், நாசாவின் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

புளோரிடாவின் கிழக்கு கடலோர பகுதியை நோக்கி சூறாவளி பயணிக்கும் என்றும், கென்னடி விண்வெளி மையம் அருகே கடந்து செல்ல கூடிய இந்த பருவகால புயலால் பாதிப்பு ஏற்பட கூடும் என்ற அச்சத்தில் நிலவு ஆய்வு விண்கலத்தின் பயணம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த முறை நவம்பர் 16-ந்தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என நாசா விண்வெளி கழகத்தின் மூத்த அதிகாரி ஜிம் ப்ரீ டுவிட்டரில் பதிவிட்டார்.

தொடர்ந்து 2 முறை எரிபொருள் கசிவு, 2 முறை சூறாவளி புயலால் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்ட சூழலில், இந்த முறை அந்த முயற்சி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், நிலவுக்கு ராக்கெட்டை அனுப்பும் நாசாவின் திட்டம் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று நள்ளிரவில் ராக்கெட்டை செலுத்த தயாரான நிலையில், திடீரென ஹைடிரஜன் வாயு கசிவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதற்கான சரியான காரணம் பற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை.

எனினும், குறைவான கசிவுக்கு நடைமுறையை மாற்றியமைத்தனர். 322 அடி நீளமுள்ள ராக்கெட்டுக்குள் மீண்டும் எரிபொருளை செலுத்தி, வெளியேற விடாமல் பாதுகாப்புடன் வைக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் தெரிவித்து உள்ளனர். 6 மணிநேர திட்டம் இறுதியடையும் சூழலில் ஹைடிரஜன் வாயு கசிவு கண்டறியப்பட்டது.

இதற்காக வாயுவின் அழுத்தம் குறைக்க செய்யும் முக்கிய பணியும் நடந்து வருகிறது. ஒருபுறம் கவுன்ட்-டவுன் நடந்தபோதும் மறுபுறம் சிவப்பு குழு எனப்படும் பணி குழுவினர் தொடர்ந்து கசிவை சரி செய்யும் பணியை தொடர்ந்தனர்.

அந்த ராக்கெட்டுக்குள் 37 லட்சம் லிட்டர் அளவுக்கு அதிகம் குளிர்விக்கப்பட்ட ஹைடிரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயு உட்செலுத்தப்பட்டு உள்ளது. இன்று காலை, ராக்கெட் செலுத்தப்படும் நிகழ்வை காண பீச் மற்றும் சாலைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமுடன் திரண்டிருந்தனர். எனினும், எரிபொருள் கசிவை சரிசெய்யும் சூழலில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story