சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்


சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்
x

சூடானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவியுடன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.

வாஷிங்டன்,

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர்.

சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, சண்டை நடந்து வரும் சூடான் நாட்டில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எங்களது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர் என கூறியுள்ளார்.

இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், கார்ட்டூம் நகரில் இருந்து அமெரிக்க அரசு அதிகாரிகளை, எனது உத்தரவின் பேரில் இன்று, அமெரிக்க ராணுவத்தினர் சென்று பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.

சூடான் மக்களுடன் இணைந்து பணியாற்றி, தங்களது கடமைகளை துணிச்சல் மற்றும் தொழில்பக்தியுடன் மேற்கொண்ட நம்முடைய தூதரக பணியாளர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்து உள்ளார் என்று அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

அவர்களை மீட்டு கொண்டு வந்த நம்முடைய ஈடு இணையற்ற திறமையான ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நமது முயற்சி வெற்றி பெறுவதில் உதவிய முக்கியம் வாய்ந்தவர்களான ஜிபவுட்டி, எத்தியோப்பியா மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

அமெரிக்கர்களை மீட்டு கொண்டு வரும் முயற்சியில் எங்களுடைய நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம். சூடானில் மீதமுள்ள அமெரிக்கர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் பணிகளை பற்றி தனது குழுவினரிடம் இருந்து சீராக தகவல்கள் கிடைக்க பெறுகின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story