மியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி- ஐநா கடும் கண்டனம்


மியான்மரில் ராணுவம் வான்வழி தாக்குதல்; 100 பேர் பலி-  ஐநா கடும் கண்டனம்
x

Photo Credit: AP

தினத்தந்தி 12 April 2023 3:33 AM GMT (Updated: 13 April 2023 12:56 AM GMT)

மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு ஐநா அமைப்பின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேபிடாவ்,

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. 2 ஆண்டுகளை கடந்த பிறகும் அங்கு ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்தி சண்டையிட்டு வருகின்றன.அந்த வகையில் மியான்மரின் மத்திய பகுதியில் உள்ள சகாயிங் பிராந்தியத்தில் வாழும் மக்கள் ராணுவ ஆட்சியைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். கிளர்ச்சிக் குழுக்களை அமைத்துக் கொண்டுள்ள அந்த மக்கள், தாங்களே பள்ளிகள், ஆஸ்பத்திரிகளை சொந்தமாக நடத்துகின்றனர்.

இந்த நிலையில் சகாயிங் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டதைக் கொண்டாட நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 300 பேர் அங்கு கூடியிருந்தனர்.அப்போது அவர்கள் மீது ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகளை வீசின. இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 100 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.சொந்த நாட்டு மக்களையே மியான்மர் ராணுவம் குண்டு வீசி கொன்ற சம்பவம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பல மியான்மர் ராணுவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மியான்மர் ராணுவத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச சமூகத்துக்கு மியான்மரின் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


Next Story