பிரதமர் பதவிக்கான முயற்சியை கைவிட்ட நவாஸ் ஷெரீப் - எம்.பி.யாக பதவியேற்றார்


பிரதமர் பதவிக்கான முயற்சியை கைவிட்ட நவாஸ் ஷெரீப் - எம்.பி.யாக பதவியேற்றார்
x

Image Courtesy : @pmln_org 

நவாஸ் ஷெரீப் ஏற்கனவே 3 முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க ஒரு கட்சிக்கு 133 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்றது.

அதே சமயம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சிக்கு 75 இடங்களும், பி.பி.பி. கட்சிக்கு 54 இடங்களும், எம்.க்யூ.எம்.-பி கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. இந்த நிலையில், நவாஸ் ஷெரீப் தலைமையிலான பி.எம்.எல்.-என் கட்சி மற்றும் பி.பி.பி. கட்சி ஆகியவை இணைந்து மற்ற 4 சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

நவாஸ் ஷெரீப் ஏற்கனவே 3 முறை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்துள்ளார். இதையடுத்து 4-வது முறையாக நவாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 16-வது அமர்வில் சராசரி எம்.பி.யாக நவாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

அதே சமயம், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவை பெற்றவரும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story