ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு


ஒரே நாளில் 90 பீரங்கி குண்டுகள் வீச்சு: வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 Jan 2024 1:28 AM IST (Updated: 8 Jan 2024 1:07 PM IST)
t-max-icont-min-icon

வடகொரியா மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

சியோல் [தென் கொரியா],

வட கொரியா நேற்று அதன் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள கடல் பகுதியில் இருந்து சுமார் 90 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு எல்லைக் கோட்டிற்கு வடக்கே கடல்சார் பாதுகாப்பு மண்டலம், மஞ்சள் கடலின் கடல் எல்லை மற்றும் தென் கொரியாவின் எல்லைத் தீவான யோன்பியாங் ஆகிய இடங்களில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை பீரங்கித் தாக்குதல்கள் நடந்ததைக் கண்டறிந்ததாக கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) தெரிவித்தனர்.

எல்லையில் பதற்றத்தை குறைக்க வடிவமைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டு கொரிய நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இந்த இடையக மண்டலம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் தென் கொரிய ராணுவத்திற்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தென் கொரிய ராணுவம் பதில் பயிற்சிகளை நடத்தத் திட்டமிடவில்லை என்றும் அதிகாரிகள் கூறினர். இதனால் தென்கொரியா கடல் எல்லைக்கு அருகே பதற்றம் அதிகரித்துள்ளது.

முன்னதாக தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா நேற்று முன் தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதாக கூறப்படும் நிலையில், தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று மீண்டும் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது.

1 More update

Next Story