வடகொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு..? - ஜப்பான் பிரதமர் அலுவலகம் தகவல்


வடகொரியா மீண்டும் ஏவுகணை வீச்சு..? - ஜப்பான் பிரதமர் அலுவலகம் தகவல்
x

கோப்புப்படம்

வடகொரியா சந்தேகத்திற்கிடமான வகையில் மீண்டும் ஏவுகணையை ஏவியுள்ளதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டோக்யோ,

தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 2 ஏவுகணைகளை தன் பங்குக்கு வெற்றிகரமாக சோதித்தது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர 'பாலிஸ்டிக் ' ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது.

இந்த சூழலில் வடகொரியா நேற்று முன் தினம் அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக் ' ரக ஏவுகணைகளை சோதித்தது. முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டது. இது 100 கி.மீ. உயரத்துக்கு சென்று 350 கி.மீ. தொலைவுக்கு பறந்தது. மேலும் 2-வது ஏவுகணை 50 கி.மீ. உயரத்திற்கு சென்று 800 கி.மீ. தொலைவுக்கு பறந்தது.

கொரிய எல்லையில், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக 3 நாடுகளையும் அச்சுறுத்தும் விதமாக அடுத்தடுத்து வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கடந்த 25 ஆம் தேதி தேதியிலிருந்து 6 முறை ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தி உள்ளது.

இதனிடையே ஜப்பானை நோக்கிய திசையில் வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் ஏவுகணையை மீண்டும் வட கொரியா பரிசோதித்து இருப்பது பதற்றத்தை அதிகரித்தது. வட கொரியாவின் இந்த செயல் சட்டவிரோதமானது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் வடகொரியா சந்தேகத்திற்கிடமான வகையில் மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

1 More update

Next Story