வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல்..!!


வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல்..!!
x

கோப்புப்படம்

வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜப்பானுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

பியாங்யாங்,

வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வப்போது ஜப்பானை நோக்கி ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டது. இந்த கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது. இந்த நிலையில் ஜப்பானின் இந்த புதிய ராணுவ கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா ஜப்பானுக்கு எதிராக வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.

இது குறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மற்ற நாடுகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு எதிர் தாக்குதல் திறனை மேம்படுத்துவது, தற்காப்புடன் எந்த தொடர்பும் இல்லாதது. தனது பேராசையைத் தீர்த்துக்கொள்வதற்கான ஜப்பானின் முட்டாள்தனமான முயற்சி இது.

தற்காப்பு உரிமைகளை நியாயமான முறையில் செயல்படுத்துவது என்ற சாக்குப்போக்குடன் அதன் ராணுவ படையெடுப்பு திறனைக் கட்டியெழுப்புவது நியாயப்படுத்தப்படவும், பொறுத்துக்கொள்ளவும் முடியாது. ஜப்பானிய பாதுகாப்பு கொள்கையால் எழுந்துள்ள சிக்கலில் இருந்து வடகொரியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க தைரியமான மற்றும் வலுவான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.


Next Story