1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்.. சிக்கிக்கொண்ட மாணவர்கள்- ஆசிரியர்கள்; மீட்பு பணி தீவிரம்


1000 அடி உயரத்தில் அறுந்து விழும் நிலையில் கேபிள் கார்.. சிக்கிக்கொண்ட மாணவர்கள்- ஆசிரியர்கள்; மீட்பு பணி தீவிரம்
x

பாகிஸ்தானின் வடமேற்கில் பள்ளத்தாக்கில் அந்தரத்தில் கேபிள் காரில் சிக்கிய ஆறு மாணவர்கள் உள்பட 8 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அல்லாய் பள்ளத்தாக்கில் உள்ள கிராமத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மற்ற மாணவ மாணவிகள் தாம்டோர் நகருக்கு செல்வதற்கு, 1000 அடி உயரம் உள்ள குல் தோக் கேபிள் காரில் பயணம் செய்கிறார்கள். இன்று காலை அந்தரத்தில் கேபிள் கார் சென்று கொண்டிருக்கும் போது கேபிள் உடைந்ததால் கேபிள் கார் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதில் பயணம் செய்த 6 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் 1000 அடி உயரத்தில் கேபிள் காரில் சிக்கிக் கொண்டனர்.

இந்த 8 பேரை மீட்கும் பணியில் தற்போது ராணுவம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அந்தரத்தில் சிக்கிய மாணவர்கள் அனைவரும் 10 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த தகவல் வெளியானதை அடுத்து பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் மீட்பு பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பலத்த காற்று வீசுவதால் மீட்பு நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் தினமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கேபிள் கார் மூலம் பள்ளிக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர் என உள்ளூர் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


Next Story