பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியாவில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு


பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியாவில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
x

பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவுக்கு சென்று சேர்ந்ததும் அவரை அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் நேரில் வரவேற்றார்.

போர்ட் மோர்ஸ்பை,

பிரதமர் மோடி ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் பகுதியாக, கடந்த 19-ந்தேதி அவர் ஜப்பான் சென்றார்.

இதில், ஜி-7 மற்றும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதன்பின்னர், பல்வேறு தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி விரிவாக பேசினார். ஜப்பான் நாட்டுக்கான பயணம் இன்றுடன் நிறைவடைந்த பின்னர் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.

அந்நாட்டின் விமான நிலையத்தில் சென்று இறங்கியதும், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவரை நேரில் வரவேற்றார்.

அதன்பின் உயர்மட்ட தலைவர்கள், அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதன்பின்னர், பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இசை கருவிகளும் இசைக்கப்பட்டன.

அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, இசை நிகழ்ச்சி, நடனம் என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார்.

பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் உடன் இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் 3-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்பின்னர், நாளை ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணம் வருகிற 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும்.


Next Story