"பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமை" - ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பியூஷ் கோயல் பேச்சு


பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமை - ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பியூஷ் கோயல் பேச்சு
x

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமையை பியூஷ் கோயல் பாராட்டினார்.

வாஷிங்டன்,

இந்திய-அமெரிக்க கூட்டுமுயற்சி மாநாடு மற்றும் இந்தோ- பசிபிக் பொருளாதார திட்டங்களுக்கான அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

முன்னதாக சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பியூஷ் கோயல், அமெரிக்காவில் 6 பகுதிகளில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தை (ஐ.சி.ஏ.ஐ) தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் உள்ள பட்டய கணக்காளர்கள் பிராண்ட் இந்தியாவின் தூதர்களாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், தான் கடந்த 8 வருடங்களாக பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் பணியாற்றி வருவதாகவும், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் ஆழமான நிர்வாகக் கொள்கைகளைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவிற்கான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறமை வெளிப்படுவதாக அவர் கூறினார். உதாரணமாக உஜாலா (UJALA) திட்டத்தின் கீழ், இந்தியாவில் எல்.ஈ.டி. பல்புகளுக்கான நிலையான மற்றும் மிகப்பெரிய சந்தை மதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஒப்பற்ற நிர்வாகத் திறன் காரணமாக இந்தியாவில் எல்.ஈ.டி. பல்புகளுக்கான சந்தை விரிவுபடுத்தப்பட்டு, அதன் சில்லறை மதிப்பு விலை குறைய வழிவகுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story