லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிரித்தி படேல்


லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிரித்தி படேல்
x

image courtesy: Priti Patel twitter

லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் உள்துறை மந்திரி பதவியை பிரித்தி படேல் ராஜினாமா செய்தார்.

லண்டன்,

இங்கிலாந்தின் பிரதமராக லிஸ் டிரஸ் முறைப்படி பதவியேற்றவுடன், இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகப் போவதாக பிரித்தி படேல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு கடந்த 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் 1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணையவழியில் வாக்கு அளித்தனர். பதிவான வாக்குகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் எதிர்பார்த்தது போலவே லிஸ் டிரஸ் தேர்வு ஆனார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரிஷி சுனக்கைவிட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு ஆனார்.

இந்த நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக டிரஸ் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பிரித்தி படேல் தன்னுடைய ராஜினாமாவை அறிவித்துள்ளார். டிரஸ் செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளார்.

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்பியுள்ள தன்னுடைய ராஜினாமா கடிதத்தை, பிரித்தி படேல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நம்முடைய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லிஸ் டிரஸ்ஸை வாழ்த்துகிறேன். மேலும் நம்முடைய புதிய பிரதமரான அவருக்கு எனது ஆதரவை வழங்குவேன்.

லிஸ் முறைப்படி பதவி ஏற்றதும், புதிய உள்துறை மந்திரி நியமிக்கப்பட்டதும், பின்வரிசையில் இருந்து நாட்டிற்கும் விதம் தொகுதிக்கும் எனது பொதுச் சேவையைத் தொடர்வது எனது விருப்பம்" என்று கூறியுள்ளார்.


Next Story