புதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு


புதினின் போர் நிறுத்த அறிவிப்பு ஒரு தந்திரம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம் 

புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துவதாக உக்ரைன் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.

இந்த நிலையில் ரஷியாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது.

புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷிய துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்" என்றார்.


Next Story