சிறுபான்மை மதவழிபாட்டு தலங்கள் மீது தொடர் தாக்குதல்கள்: ஐ.நா.வில் இந்தியா எச்சரிக்கை


சிறுபான்மை மதவழிபாட்டு தலங்கள் மீது தொடர் தாக்குதல்கள்:  ஐ.நா.வில் இந்தியா எச்சரிக்கை
x

சிறுபான்மை சமூக மதவழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் கம்போஜ் கூறியுள்ளார்.



நியூயார்க்,



ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் பேசும்போது, ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் பல்வேறு முறை நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

இதன்படி, உயிர் காக்கும் மருந்துகள், காசநோய் ஒழிப்பு மருந்துகள் மற்றும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் உள்பட 32 டன்கள் மருத்துவ உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதுவரை 40 ஆயிரம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் காபூல் நகரில் ஜூன் 18-ந்தேதி சீக்கிய குருத்வாரா மீது நடந்த தாக்குதல், தொடர்ந்து அதே குருத்வாரா அருகே நடந்த மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளிட்ட சிறுபான்மை சமூக மதவழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய இந்திய தூதர் கம்போஜ் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பட்டியலிட்டுள்ள, லஷ்கர் இ தய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையேயான பிணைப்புகள் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே செயல்பட்டு வரும் பிற பயங்கரவாத இயக்கங்களின் தூண்டி விட கூடிய அறிக்கைகள் ஆகியவை அந்த பகுதியின் அமைதி மற்றும் ஸ்திர தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story