எல்லையில் 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியாவால் பதற்றம்


எல்லையில் 30 போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியாவால் பதற்றம்
x

வடகொரியா 12 போர் விமானங்களை அனுப்பிய நிலையில், தென்கொரியா தனது எல்லையில் 30 போர் விமானங்களை பதிலடியாக அனுப்பியது அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தி உள்ளது.



சியோல்,


அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது.

இதன்படி, ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்களை அனுப்பியது பதற்ற சூழலை ஏற்படுத்தியது. இதுபற்றி தென்கொரிய ராணுவம் கூறும்போது, பரஸ்பர எல்லை பகுதியருகே வடகொரியா, 8 போர் விமானங்கள் மற்றும் 4 குண்டுவெடிப்பு நிகழ்த்தும் விமானங்கள் என 12 போர் விமானங்களை அனுப்பியது.

வானில் இருந்து தரையை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சிகளை வடகொரிய விமானங்கள் நடத்த கூடும் என நம்பப்படுகிறது. அதனாலேயே, அதற்கு பதிலடி தரும் வகையில் எங்களது 30 போர் விமானங்களை எல்லையையொட்டிய பகுதிக்கு அனுப்பியுள்ளோம் என தெரிவித்து உள்ளது.

வடகொரியாவின் தூண்டுதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் உறுதியான நடவடிக்கையின் ஒரு முயற்சியாகவே இந்த போர் விமானங்கள் அனுப்பப்பட்டன என தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று வடகொரியா இன்று கிழக்கு கடல் பகுதிகளில் குறுகிய தொலைவு சென்று தாக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளையும் சோதித்தது. எனினும், இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பொருளாதார மண்டல பகுதியை அடையவில்லை ஜப்பான் ராணுவ மந்திரி யசுகாஜூ ஹமடா உறுதிப்படுத்தி உள்ளார்.


Next Story