ஸ்பெயின்: வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத்தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ


ஸ்பெயின்:  வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத்தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ
x

ஸ்பெயினில் காட்டுத்தீயை தடுக்க டிராக்டரில் சென்றவர் அதில் சிக்கி, தீப்பற்றி எரியும் உடையுடன் தப்பியோடும் வீடியோ காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன.



தபரா,



ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகிறது. இதனால், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1,000 கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்திலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வருகிறது.

வெப்ப அலையால் பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத்தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது.

அந்நாட்டின் வடமேற்கே தபரா நகரில் ஏஞ்சல் மார்டின் அர்ஜோனா என்பவர் வயல்வெளி ஒன்றில் டிராக்டரில் சென்று பணி செய்து கொண்டு இருந்துள்ளார். வெப்ப அலையால் பரவிய காட்டுத்தீயானது அவர் இருந்த வயலையும் விட்டு வைக்கவில்லை.

தீ மளமளவென பரவி வந்தது. தீயை நிறுத்துவதற்கான பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக வயலில் டிராக்டரை கொண்டு அகழி ஏற்படுத்தி உள்ளார். ஆனால், வேகமுடன் பரவிய காட்டுத்தீ அவரை தொடர்ந்து வந்து நெருங்கியது.

ஒரு கட்டத்தில் வேலி பக்கத்தில் டிராக்டரில் திரும்ப முயன்ற அவரை தீ சூழ்ந்து கொண்டது. சிறிது நேரத்தில் அந்த வீடியோவில், அவரது டிராக்டரையும் காணவில்லை. உயரே பற்றி எரிந்த தீ மற்றும் புகை மண்டலத்தில் சிக்கிய அர்ஜோனா தப்பி பிழைத்து, ஓடி வந்துள்ளார்.

உடைகளில் பற்றிய தீயையும் அணைத்தபடி ஓடும் காட்சிகள் வெளிவந்துள்ளன. நல்ல வேளையாக, அருகே இருந்த தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு ஓடி வந்து, அவரை மீட்டனர். இதன்பின்பு, படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் ஒன்றில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.




Next Story