பெலாரஸ் எல்லை அருகே பதற்றம்; ரஷியாவுக்கு போட்டியாக உக்ரைனிய படைகள் குவிப்பு


பெலாரஸ் எல்லை அருகே பதற்றம்; ரஷியாவுக்கு போட்டியாக உக்ரைனிய படைகள் குவிப்பு
x

உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லை அருகே உக்ரைனிய அரசு தனது படைகளை குவித்து உள்ளது என ரஷியா அறிவித்து உள்ளது.

கீவ்,

ரஷிய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி போலிஷ்சக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், எங்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உண்மையில் உக்ரைனிய அரசு தனது படைகளை குவித்து உள்ளது என தெரிய வந்து உள்ளது.

அது ரஷியாவின் பாதுகாப்பு திறனை ஆய்வு செய்யும் முயற்சியாக சீராக நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார். உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷியா போர் தொடுத்தது. இந்த படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்கி வருகின்றன.

கடந்த வாரம் இந்த போரின் ஒரு பகுதியாக, ரஷியாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைனின் படைகள் பெரிய அளவில் போரில் ஈடுபட தொடங்கின. இந்த நிலையில், உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷியா அனுப்ப முடிவு செய்தது.

இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த வாரம் கூறும்போது, ரஷியாவிடம் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவற்றின் முதல் பகுதி வந்தடைந்து உள்ளது. ஒரு தடுப்பு நடவடிக்கைக்காகவே இவை குவிக்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார். இந்த தகவலை தி ஹில் பத்திரிகை தெரிவித்தது.

ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு அரசு ஊடகங்களுக்கு லுகாஷென்கோ அளித்த பேட்டியில், ரஷியாவிடம் இருந்து பெற்ற ஏவுகணைகளையும் மற்றும் வெடிகுண்டுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இந்த வெடிகுண்டுகள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என கூறியுள்ளார் என பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கின்றது.

போரின் தொடக்கத்தில் இருந்து ரஷிய ஆதரவு நிலைப்பாட்டை பெலாரஸ் எடுத்து உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தும் முடிவை ரஷியா மேற்கொள்ள உள்ளது என தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீபகால நடவடிக்கைகள் அமைந்து உள்ளன.

உக்ரைனும், போரை எதிர்கொள்ள தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பெலாரஸ் நாடுகளின் எல்லை அருகே உக்ரைனிய அரசு தனது படைகளை குவித்து உள்ளது என ரஷியா தெரிவித்து உள்ளது.

இதுபோன்ற சூழலில், கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து கூடுதல் படைகள் பெலாரசில் குவிக்கப்பட்டு வருகின்றன. ரஷியா மீது நடைபெறும் படையெடுப்பை மற்றும் ஊடுருவல் குழுக்களை தடுக்கும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என ரஷிய வெளியுறவு துறை மந்திரி அலெக்சி வலியுறுத்தி உள்ளார்.


Next Story