தாய்லாந்தில் மது பாரில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உடல் கருகி பலி


தாய்லாந்தில் மது பாரில் பயங்கர தீ விபத்து - 13 பேர் உடல் கருகி பலி
x

தாய்லாந்தில் மது பாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.



பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சோன்புரி மாகாணம், சத்தாஹிப் நகரில் 'மவுண்டன் பி நைட்ஸ்பாட்' என்கிற இரவு நேர மது பார் ஒன்று உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த மது பாரில் வழக்கம்போல் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு மது அருந்தி கொண்டிருந்தனர். மேலும் மது பாரில் இசை கச்சேரியும் நடந்தது. மதுபிரியர்கள் அனைவரும் மது அருந்தியவாறு இசையை ரசித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில் பாரில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அங்கு இருந்தவர்கள் 'தீ, தீ,' அலறியபடி பாரை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். சிலரின் ஆடையில் தீப்பற்றிய நிலையில் தீயுடன் வெளியே ஓடி சென்றனர்.

இதற்கிடையில் மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ ஒரு நிமிடத்துக்குள்ளாக பாரின் நாலாபுறமும் பரவி சூழந்து கொண்டது. இதனால் பாரில் இருந்த பலர் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த கோர விபத்தில் 4 பெண்கள் உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் அடையாளம் காணமுடியாதபடி கரிக்கட்டையானது. மேலும் இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுப்பற்றி விரிவான விசாரணை நடத்த அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாங்காக்கில் உள்ள ஒரு இரவு மதுபாரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 66 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.


Next Story