பிரான்சில் சோகம்: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு


பிரான்சில் சோகம்: ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் உயிரிழப்பு
x

பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

பாரீஸ்,

பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

சுற்றுலா தலம்

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடர் பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது. பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இங்கு பனிச்சறுக்கு விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்த மலைத்தொடரின் தென்மேற்கு பகுதியில் மிக உயரமான சிகரம் என கருதப்படும் மோன்ட் பிளாக் அமைந்துள்ளது. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதில் சிலர் இங்குள்ள அர்மான்செட் பனிப்பாறையில் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டு ராட்சத பனிப்பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் பனிச்சரிவில் சிக்கினர்.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்த சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடனும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. எனினும் இந்த பனிச்சரிவில் சிக்கி 3 சுற்றுலா பயணிகள், உள்ளூரை சேர்ந்த 2 வழிகாட்டிகள் என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த பலரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிலர் மாயமானதால் அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதிபர் இரங்கல்

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் தெரியவில்லை. இதற்கிடையே பனிச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அந்த நாட்டின் அதிபர் மேக்ரான் மற்றும் உள்துறை மந்திரி ஜெரால்டு டார்மானின் ஆகியோர் சமூக வலைதளம் மூலமாக தங்களது இரங்கலை தெரிவித்து உள்ளனர்.


Next Story