துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்: 5,100-ஐ கடந்த உயிரிழப்புகள் - தொடரும் மீட்புப் பணிகள்


துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்: 5,100-ஐ கடந்த உயிரிழப்புகள் - தொடரும் மீட்புப் பணிகள்
x

Image Courtacy: AFP

துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,100-ஐ கடந்துள்ளது.

இஸ்தான்புல்,

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் உள்ள காசியண்டெப் நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

துருக்கியில் 1939ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக இது கருதப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவுக்கு, உணவுகள், மருத்துவப்பொருட்கள், எரிபொருட்கள், மீட்பு படை விமானங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் அடுத்தடுத்து அனுப்பி வருகின்றன. இந்தியா சார்பில் துருக்கிக்கு இன்று காலை இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி இருந்தது.

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,100-ஐ கடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் 10 மாகாணங்களில் 3 மாத காலம் அவசர நிலை அமலில் இருக்கும் என துருக்கி அதிபர் அறிவித்துள்ளார்.


Next Story