லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் பகுதியை விட்டுக்கொடுக்க மாட்டோம் - ஜெலன்ஸ்கி உறுதி
உக்ரைன் மீது ரஷியா 118-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.
போர் நடவடிக்கைகளை ரஷியா இந்த வாரம் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Live Updates
- 21 Jun 2022 4:09 PM GMT
போர் குற்றங்கள் விசாரணை நடத்த உக்ரைனுக்கு உதவ உறுதிமொழி அளித்த அமெரிக்கா
கீவ்,
உக்ரைனில் போர் குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு அந்நாட்டுக்கு உதவ அமெரிக்கா உறுதிமொழி அளித்து உள்ளது.
அமெரிக்க அரசு வழக்கறிஞர் மெர்ரிக் கார்லேண்ட், போர் நடந்து வரும் உக்ரைன் நகருக்கு சென்றுள்ளார். அவர் கூறும்போது, நியாயமற்ற ரஷியாவின் போருக்கு மத்தியில், உக்ரைனிய மக்களுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்த நான் வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
முழு உலகமும் காணக்கூடிய அட்டூழியங்கள் அல்லது போர் குற்றங்கள் புரிந்தவர்களை, அதற்கு பொறுப்பேற்க வைக்கும் உக்ரைனிய அதிகாரிகளுக்கு உதவ அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய நம்முடைய விவாதங்களை தொடர நான் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
- 21 Jun 2022 11:20 AM GMT
ரஷியா தனது ஆயுதப் படைகளை மேலும் பலப்படுத்தும் - அதிபர் புதின் அறிவிப்பு
ரஷ்யா தனது ஆயுதப் படைகளை மேலும் பலப்படுத்தும் என்று அதிபர் விளாடிமிர் புதின் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் , "இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, எங்கள் ஆயுதப் படைகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வலுப்படுத்துவோம்.
புதிதாகப் பரிசோதிக்கப்பட்ட எங்களின் சர்மட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. இந்த ஆண்டு இறுதிக்குள் அவை பணியில் ஈடுபடுத்தப்படும் " என தெரிவித்துள்ளார்.
- 21 Jun 2022 6:51 AM GMT
அத்வீவ்கா நகரில் பள்ளி ஒன்று ரஷியா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அழிக்கப்பட்டது: அம்மாநில கவர்னர் தகவல்
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அத்வீவ்கா நகரில் உள்ள ஒரு பள்ளியை ரஷியப் படைகள் இரவோடு இரவாக குண்டு வீசி அழித்ததாக அம்மாநில கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தனது டெலிகிராம் பக்கத்தில், “இது அத்வீவ்காவில் ரஷியர்களால் அழிக்கப்பட்ட மூன்றாவது பள்ளியாகும். மொத்தத்தில், ரஷிய படையெடுப்பாளர்கள் டொனெட்ஸ்க் பகுதியில் சுமார் 200 பள்ளிகளை அழித்துள்ளனர்” என்று கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
- 21 Jun 2022 5:17 AM GMT
1,500க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் ரஷிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் - துணைப் பிரதமர் தகவல்
1,500 க்கும் மேற்பட்ட உக்ரேனிய குடிமக்களை ரஷியா, தனது சிறைகளில் வைத்திருக்கிறது என்று உக்ரைனின் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.
- 21 Jun 2022 4:27 AM GMT
கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதல்களில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர்.
மேலும் கார்கிவ் ஒப்லாஸ்ட் கவர்னர் ஓலே சினிஹுபோவ் கூறுகையில், நேற்று குடுசிவ்கா கிராமத்தின் மீதான தாக்குதலில் 65 வயதுப் பெண் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.
- 21 Jun 2022 2:32 AM GMT
உக்ரைனின் கெர்சன் நகரத்தை ரஷியாவுடன் சேர்க்க வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான கெர்சன் நகரை ரஷியாவின் ஒரு பகுதியாக மாற்றுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ரஷியாவின் செய்தி நிறுவனமான ஆர்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது.
- 21 Jun 2022 12:16 AM GMT
உக்ரைன் சிறுவர்களின் உதவிக்காக நோபல் பரிசை விற்கும் ரஷிய பத்திரிகையாளர்...!
நியூயார்க்,
ரஷியாவை சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ். தனது பத்திரிகையில் அதிபர் புதின் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் டிமிட்ரி, நாட்டில் பேச்சுரிமை மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் ஆவார். இதற்காக அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தங்க பதக்கமும், 5 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடியே 89 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் சிறுவர்களுக்கு உதவும் வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்க பதக்கத்தை விற்க டிமிட்ரி முடிவு செய்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்க பதக்கம் ஏலம் விடப்படுவதாகவும், அதில் கிடைக்கும் தொகை நேரடியாக யுனிசெப் அமைப்புக்கு செல்லும் எனவும் டிமிட்ரி அறிவித்துள்ளார்.
பரிசு தொகையாக கிடைத்த 5 லட்சம் டாலரை யுனிசெப் அமைப்புக்கு வழங்குவாக டிமிட்ரி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 21 Jun 2022 12:03 AM GMT
போருக்கு நடுவில் நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர உக்ரைன் மக்கள் முயற்சி
உக்ரைனில் உள்ள பாக்முட் (Bakhmut) நகரத்து மக்கள் ஏவுகணைகளின் சத்தங்களுக்கு நடுவிலும் இயல்பு வாழ்க்கையை தொடர அன்றாட் பணிகளை மேற்கொள்ள் விரும்புகின்றனர்
ரஷிய படைகள் தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் சிவியரோடொனெட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் நகரங்களுக்கு தென்மேற்கே பாக்முட் நகரம் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஏவுகணைகளின் சத்தங்கள் அவ்வப்போது அங்கு கேட்டுக்கொண்டிருப்பதற்கு மத்தியில் சில வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து வியாபரத்தில் ஈடுபட்டுள்ளனர்.