3-வது ஆண்டை நெருங்கும் உக்ரைன்-ரஷியா போர்; ஆயுதப்படை தளபதியை அதிரடியாக மாற்றிய ஜெலன்ஸ்கி


3-வது ஆண்டை நெருங்கும் உக்ரைன்-ரஷியா போர்; ஆயுதப்படை தளபதியை அதிரடியாக மாற்றிய ஜெலன்ஸ்கி
x

தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படை தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் 3-வது ஆண்டை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் ஆயுதப்படை தளபதியை மாற்றி அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தலைமை தாங்கி வந்த கர்னல் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுதப்படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆயுதப்படை தளபதியாக இருந்த வலேரி ஜலுஷ்னி, 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்டவர் ஆவார். இந்நிலையில் சமீப காலமாக போரில் உக்ரைன் படைகளுக்கு தொடர் பின்னடைவுகள் ஏற்பட்டன. டிரோன்கள் மற்றும் உயர் ரக தொழில்நுட்பம் கொண்ட ஆயுதங்கள் மூலம் மட்டுமே ரஷியாவின் மிகப்பெரிய ராணுவத்துடன் உக்ரைனால் போட்டியிட முடியும் என்று நேர்காணல் ஒன்றில் வலேரி ஜலுஷ்னி கூறியிருந்தார்.

மேலும் போரில் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், புதிய வீரர்களை அணிதிரட்ட சட்ட மாற்றங்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக ஜெலன்ஸ்கி மற்றும் வலேரி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், தற்போது ஆயுதப்படை தளபதி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story