#லைவ் அப்டேட்ஸ்: 'உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்' - அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்


#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 25 May 2022 10:12 PM GMT (Updated: 26 May 2022 4:31 AM GMT)

போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்தார்.


Live Updates

  • 26 May 2022 12:32 AM GMT

    மேற்கு நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவி தேவை - அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை

    சமாதான உடன்படிக்கைக்காக உக்ரைனில் ரஷியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை அதிபர் ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும் அவர் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அதிக இராணுவ உதவியை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • 26 May 2022 12:22 AM GMT

    ‘பொருளாதார தடைகளை நீக்குங்கள்’ - ரஷிய வெளியுறவு துறை துணை மந்திரி

    உலகளாவிய உணவு நெருக்கடியை தடுக்கிற வகையில், விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, உக்ரைன் மீதான போரினால் விதிக்கப்பட்டுள்ள பொருளதார தடைகளை நீக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி உள்ளது.

    உக்ரைன், உலகின் முன்னணி உணவு தானிய ஏற்றுமதி நாடாகும். ஏற்றுமதிக்கு உணவு தானியங்களை குவித்து வைத்து இருந்தாலும், துறைமுகங்களை உக்ரைன் படைகள் முற்றுகையிட்டிருப்பதால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை.

    இதையொட்டி ரஷிய வெளியுறவு துறை துணை மந்திரி ஆண்ட்ரே ரூடெங்கோ கூறுகையில், “உக்ரைனில் இருந்து கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கு மனித நேய வழித்தடத்தை ஏற்படுத்தித்தர ரஷியா தயாராக இருக்கிறது. ஆனால் பொருளாதார தடைகளை அகற்ற வேண்டும். கீவ் அருகில் கண்ணிவெடிகளையும் அகற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

  • 26 May 2022 12:02 AM GMT

    சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் பலி

    இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதல் நீடிக்கிறது. சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை லுஹான்ஸ்க் பிராந்திய கவர்னர் செர்கிய் ஹைடய் தெரிவித்துள்ளார்.

    அந்த நகரம் 24 மணி நேரமும் தாக்கி அழிக்கப்படுவதாகவும் அவர் கூறி உள்ளார்.

    லைமனில் ரஷிய தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆவ்டடீவ்காவில் ராணுவ நிலைகளும், பிற கட்டமைப்புகளும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன.

    பாக்மட் நகரிலும், பசிகா கிராமத்திலும் ரஷியாவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஷிய படைகளுக்கு இழப்பு நேரிட்டுள்ளது.

  • 25 May 2022 10:57 PM GMT

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3வது உலகப் போருக்கு வழிவகுக்கும் - அமெரிக்க தொழிலதிபர்

    டாவோசில் நடைபெற்று வரும் உலக வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ சொரோஸ் பங்கேற்று பேசினார்.

    அப்போது பேசிய அவர், உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மூன்றாவது உலகப் போரை நோக்கி இட்டுச் செல்லலாம். அத்தகைய போர் மனித குலத்தை முழுமையாக அழித்துவிடும். எனவே, மனிதகுலம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இப்போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். விளாடிமிர் புதின் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றார்

  • 25 May 2022 10:13 PM GMT

    உக்ரைன் அதிபர் திட்டவட்டம்

    சுவிஸ் நாட்டில் டாவோஸ் உலக பொருளாதார மன்றத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, காணொலிக் காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உக்ரைனில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை ரஷிய அதிபர் புதின் முழுமையாய் புரிந்து கொண்டிருக்கிறார் என்று நான் நம்பவில்லை” என்று தெரிவித்தார்.

    “சமரச பேச்சுவார்த்தை நடத்தி உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதா?” என்று சி.என்.என். டெலிவிஷன் சார்பில் ஜெலன்ஸ்கியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “நாங்கள் எங்கள் மண்ணுக்காக, எங்கள் நாட்டில் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தப் போர் எந்த நபருக்கும் எதிரானது அல்ல. இது எங்கள் நிலத்துக்கானது. எங்கள் சுதந்திரத்துக்கானது. எங்கள் எதிர்காலத்துக்கானது” என குறிப்பிட்டார்.


Next Story