ரஷியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பிய உக்ரைன் குழந்தைகள்


ரஷியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்பிய உக்ரைன் குழந்தைகள்
x

போரின் போது ரஷியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் உக்ரைன் திரும்பினர்.

கீவ்,

உக்ரைன்-ரஷியா போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த போரின்போது உக்ரைனில் இருந்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளை ரஷியா தங்களது நாட்டுக்கு கடத்தியதாகவும், அதில் 328 குழந்தைகள் மட்டுமே இதுவரை மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் ரஷியா மீது உக்ரைன் குற்றம் சாட்டியது. இதனை மறுத்த ரஷியா போரில் இருந்து பாதுகாப்பதற்காகவே குழந்தைகளை அழைத்து சென்றதாக கூறியது.

இதற்கிடையே குழந்தைகளை கடத்தியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோரிடம் சேர்ப்பதற்காக `ரீயூனைட் உக்ரைன்' என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி போரால் பிரிந்த குடும்பங்களை இணைக்க உதவிகரமாக இருக்கும் என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் போரின் போது ரஷியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை பெற்றோர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

தற்போது 30-க்கும் அதிகமான குழந்தைகள் நாடு திரும்பிய நிலையில், மேலும் பல குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. உக்ரைனுக்கு திரும்பி வந்த குழந்தைகளில் சிலர் தாங்கள் ரஷிய முகாமில் விலங்குகளைப் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story