நிதி நெருக்கடி காரணமாக உணவு வழங்குவதை நிறுத்தும் ஐ.நா.


நிதி நெருக்கடி காரணமாக உணவு வழங்குவதை நிறுத்தும் ஐ.நா.
x

உலக உணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் லட்சக்கணக்கானோருக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.

உலக உணவு திட்டம்

உள்நாட்டு போர், பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளால் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நாடுகளில் பட்டினியில் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு உலக உணவு திட்டம் என்ற சர்வதேச அமைப்பின் மூலம் ஐ.நா. உணவு உதவியை வழங்குகிறது.

சர்வதேச நாடுகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடம் இருந்து கிடைக்கும் தன்னார்வ நன்கொடைகள்தான் உலக உணவு திட்டத்தின் நிதி ஆதாரமாக உள்ளது. இந்த நிதியை கொண்டே உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறது.

கடும் நிதி நெருக்கடி

இந்த நிலையில் உலக உணவு திட்டத்துக்கு கிடைக்கும் நன்கொடைகள் கிட்டத்தட்ட பாதியாக சரிந்ததால் அந்த அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு அந்த அமைப்பு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உலக உணவு திட்டத்தின் துணை நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்காவ் கூறியதாவது:- உலக உணவு திட்டம் செயல்படும் 86 நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா உள்பட 38 நாடுகளில் ஏற்கனவே உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில நாடுகளில் விரைவில் உதவிகளை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.41 ஆயிரம் கோடி

உலக உணவு திட்டம் முழுமையாக செயல்பட்டு தேவைப்படும் அனைவருக்கும் உதவி வழங்க 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடி) தேவைப்படும். ஆனால் நாங்கள் 10 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.82 ஆயிரம் கோடி) முதல் 14 பில்லியன் டாலர்களையே (சுமார் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோடி) இலக்காக வைத்திருந்தோம். கடந்த சில ஆண்டுகளில் அது கிடைக்கவும் செய்தது. ஆனால் இந்த ஆண்டு அது கிட்டத்தட்ட பாதியாக குறைந்தது. இதுவரை 5 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) மட்டுமே கிடைத்துள்ளது.

80 லட்சம் மக்களுக்கு...

கொரோனா தொற்றுநோய், உக்ரைன் போர் மற்றும் அதன் உலகளாவிய தாக்கங்கள் காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மனிதாபிமான தேவைகள் பல மடக்கு அதிகரித்தன. ஆனால் அதற்கு நேர் மாறாக உலக உணவு திட்டத்தின் நிதி வறண்டு வருகிறது. இதன் காரணமாக உணவு உதவிகளை நிறுத்துவது அல்லது குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி பசியின் அவசர நிலைகளை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தானில் உள்ள சமூகங்களுக்கு 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உணவு உதவியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்படி அங்கு கடந்த மே மாதத்தில் 80 லட்சம் மக்களுக்கு உணவை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

உலக தலைவர்களுக்கு வலியுறுத்தல்

அதேபோல் பாலஸ்தீனத்தில் உலக உணவு திட்டம் அதன் உதவியை மே மற்றும் ஜூன் மாதங்களில் 20 சதவிகிதம் குறைத்தது. ஏமனில், அடுத்த மாதம் (ஆகஸ்டு) மாத தொடக்கத்தில் 70 லட்சம் மக்களுக்கு உதவியை குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே மனிதாபிமான நிதியுதவிக்கு முன்னுரிமை அளிக்கவும், மோதல்கள், வறுமை, வளர்ச்சி மற்றும் தற்போதைய நெருக்கடியின் பிற மூல காரணங்களுக்கான நீண்டகால தீர்வுகளில் முதலீடு செய்யவும் உலகத் தலைவர்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story